Saturday 6 April 2013

பிறந்தநாள் வேண்டுதல்

இன்னைக்கு சுபி குட்டிக்கு பிறந்தநாள். அவளுக்கு பிடிச்ச ரோஸ் கலர்ல அப்பா கவுன் வாங்கி தந்திருந்தாராம். அந்த ரோஸ் கலருக்கு மேட்ச் ஆற மாதிரி  அம்மா வாங்கி குடுத்த கம்மலும், பாசியும் போட்டுகிட்டு  சுபி குட்டி, இன்னைக்கு ரொம்ப அழகா  இருக்கா.

தினமும் ராத்திரி, சுபியோட அப்பா அவளுக்கு கத சொல்லுவாராம். அவ கேக்குற எல்லா கேள்விக்கும் அமைதியா பதில் சொல்லுவாராம். அதுனால, அவளுக்கு அப்பாவ ரொம்ப பிடிச்சதாம்.

ஸ்கூல் இன்னைக்கு லீவ், அதுனால சுபி குட்டிக்கு இன்னும் சந்தோஷமா இருந்துச்சாம். பக்கத்து வீட்டில இருக்குற அவளோட ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் சாக்கலேட் குடுத்துட்டு வீட்டுக்கு வந்தா சுபி குட்டி. அவ ரெண்டாப்பு படிக்குற துறு துறு சுட்டியாம்.

அப்பா அவகிட்ட, "எங்க போலாம், சுபி குட்டி பெர்த் டேக்கு ?"னு கேட்டாராம். உடனே சுபி, "பார்க்... பீச்... சினிமா.. " அப்படினு இழுத்து இழுத்து கை விரல ஒண்ணு ஒண்ணா விரிச்சப்போ, அம்மா சமையலறைல இருந்து, "முதல்ல கோவிலுக்கு போணும் சுபி குட்டி" என்று சுபி குட்டி கிட்ட சொன்னாங்களாம்.

அப்பாவும், "அது தான் கரெக்ட்" அப்படினாராம்.

"ஏன்ப்பா கோவிலுக்கு போணும்?"

"சாமி கும்பிடம்மா" அப்படின்னாராம் அப்பா.

"ஏன் சாமிய கும்பிடணும்?"

"இன்னைக்கு உன் பிறந்தநாள்ல, அதுனால"

"அதுக்கு ஏன்ப்பா கும்பிடணும்?" அப்படினு மழலையோட இழுத்து சுபி சொன்னாளாம்.

"அதுவா, சாமி நீ கேட்கிறது எல்லாம் தர்றார்ல அதுனால.. அப்புறம் வேற ஏதாவது வேணும்னாலும் சாமிகிட்ட கேட்டா தருவார் அதுனாலயும்"

"நான் சாமிய பாக்கவே இல்லயே... எனக்கு என்ன தந்தார் எப்போ தந்தார்?" அப்படின்னு மீன் போல இருந்த கண்களை விரிச்சு கேட்டாளாம் சுபி குட்டி.

"அதுவா செல்லம், சாமி நம்ம கண்ணுக்கு தெரிய மாட்டார். உனக்கு இந்த ட்ரெஸ் அப்பா வாங்கி குடுக்கல சாமி தான் வாங்கி குடுத்துச்சு. சாமி எல்லார்கிட்டயும் இருக்குறாரு"

சுபி குட்டிக்கு அப்பா சொல்றது புரியாம முழிச்சாளாம்.

"நீ ரெண்டு சாக்லேட் வச்சுருந்து, சாக்லேட் இல்லாதவங்களுக்கு ஒரு சாக்லேட் குடுத்தா, சாமி உனக்கு பத்து சாக்லேட் தருவார். அதுனால, மத்தவங்களுக்கு  நாம உதவி பண்ணா நம்ம கூடவே சாமி இருப்பார்"

இப்படி பேசிட்டு இருக்குறப்போ அம்மா வந்து, "அப்பாவும் மகளும் காலங்காத்தால ஆரம்பிச்சுட்டீங்களா? கிளம்புங்க கோவிலுக்கு" என்று சொன்னதும், அப்பா அம்மாவோட சுபி குட்டியும் கோவிலுக்கு போனா..

அப்போ கோவில் வாசல்ல நிறைய பேர், கிழிஞ்ச ட்ரெஸ் போட்டுட்டு பாவம் போல உட்கார்ந்து, பிச்சை எடுத்துட்டு இருந்தாங்களாம்.

அவங்களை பாத்ததும் சுபி குட்டி அப்பாட்ட, "யார்ப்பா இவங்கல்லாம்?" அப்படினு கேட்டா.

"இவங்கல்லாம் பிச்ச எடுக்குறாங்க. அவங்களுக்கு வீடு காசு சாப்பிட சோறு எதுவும் இல்ல. அதான் அப்படி இருக்காங்க"

"அப்பா, சாமி எது கேட்டாலும் குடுக்கும்ல. நாம எப்போவாவது தான் கோவிலுக்கு வர்றோம். நம்மட்ட எல்லாம் இருக்குது. இவங்க கோவில்லயே இருக்காங்க, ஏன் இவங்க கிட்ட ஒண்ணும் இல்ல?" என்று பட படவென கேட்டாளாம் நம்ம சுபி.

"அத நீ சாமிட்ட தான் கேக்கணும். அதுனால நாம கோவிலுக்குள்ள போலாமா?"
அப்படினு சொல்லி சுபி குட்டிய கோவிலுக்குள்ள கூப்பிட்டு போனாங்களாம்.

அப்போ சுபி குட்டி , சாமி கிட்ட "சாமி, நான் அப்பா மாதிரி ஹைட்டா வளந்ததும் , எல்லாருக்கும் உதவணும். என் கூட நீ இரு. அந்த பிச்சை எடுக்குறவங்களுக்கு எல்லாமே குடு" அப்படினு மனசுக்குள்ள சொல்லிகிட்டா நம்ம சுபி.

பிறகு வாசல்ல வர்றப்போ, அப்பாட்ட, "அப்பா, சாமி நம்ம கிட்ட இருக்க நம்ம உதவணும்ல, அந்த சோறு இல்லாதவங்களுக்கு சோறு வாங்கி தாங்களேன். ப்ளீஸ் அப்பா" அப்படினு சுபி கொஞ்சினா.

சுபியோட அம்மா, "இவங்களுக்கு சாதம் வாங்கி தந்தா, இன்னைக்கு சினிமா கிடையாது" அப்படினு சொன்னாங்களாம்.

"சரிம்மா.. சினிமா வேணாம்.. பார்க் போய் விளையாடலாம்" அப்படினு சிரிச்சுகிட்டே சுபி குட்டி சொன்னாளாம். அப்புறம், அப்பாவோட போய், பிரசாத ஸ்டால்ல புளியோதரையும் தயிர் சாதமும் வாங்கி எல்லாருக்கும் குடுத்தாளாம்.

சுபி குட்டிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஏன்னா, சாமி அவள் கிட்ட வந்துட்டாருள்ள ... அதுனால.

இப்போ சுபி குட்டி அப்பா அம்மாவோட பார்க்ல ஊஞ்சல் ஆடுகிட்டு இருக்கா. நீங்க ரோஸ் கலர் புது கவுன் போட்ட குட்டி பொண்ண பார்க்ல பாத்தா, மறக்காம "ஹாப்பி பெர்த் டே"  சொல்லுங்க. சரியா?

5 comments:

  1. Nice pa !... Padu chutti 'subi' kutty ;)

    ReplyDelete
    Replies
    1. :) நன்றி :) "படு சுட்டி சுபி குட்டி" அப்படினே டைட்டில் குடுத்துருக்கலாமோ? :)

      Delete
  2. அருமையான சிறுகதை... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete